Oct 5, 2014

சேலத்தில் கடையடைப்பு- உண்ணாவிரதப் போராட்டம்

சேலம்,

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை ஜாமீனில் விடுவிக்கக்கோரியும் சேலத்தில் பல்வேறு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதோடு சுகவனேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜையும் நடந்தது.

கடையடைப்பு

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. இதை கண்டித்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சேலம் செவ்வாய்பேட்டை, லீபஜார், சத்திரம், பால்மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் செவ்வாய்பேட்டை பகுதியில் நேற்று ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது.

வியாபாரிகள் உண்ணாவிரதம்

மேலும், சேலம் பால் மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான காய்கறி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கடையடைப்பு போராட்டத்தில், சேலம் மளிகை சில்லறை வியாபாரிகள் சங்கம், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் மளிகை மற்றும் ஷாப் வர்த்தகர்கள் சங்கம், சேலம் லீபஜார் வர்த்தகர் சங்கம், சேலம் கருங்கல்பட்டி வட்டார மளிகை வியாபாரிகள் சங்கம், சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர்கள் சங்கம், சேலம் சாக்கு வியாபாரிகள் சங்கம், சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம், சேலம், நாமக்கல் மாவட்ட காலி பாட்டில் வியாபாரிகள் சங்கம், மாவட்ட பழம்பொருள் வியாபாரிகள் சங்கம், சேலம் மாவட்டம் மீன் மற்றும் கசாய் வர்த்தகர்கள் சங்கம், ஆனந்தா இறக்கம் காய்கறி மார்க்கெட் மற்றும் காய்கறி வியாபாரிகள் சங்கம், மேட்டூர் மளிகை வியாபாரிகள் சங்கம், அயோத்தியாபட்டணம் மளிகை வியாபாரிகள் சங்கம், சேலம் வ.உ.சி. மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம், காட்டுக்கோட்டை வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் நலச்சங்கம், ஓமலூர் நகர மளிகை வியாபாரிகள் சங்கம், கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, மூங்கில்பாடி சார்ந்த அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், மேச்சேரி அனைத்து வியாபாரிகள் சங்கம், கொளத்தூர் வட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம், வாழப்பாடி நகர மளிகை வணிகர்கள் சங்கம், சேலம் பருப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளின் சங்கங்களும் கலந்து கொண்டன.

நிலத்தரகர்கள் சங்கம்

இதேபோல், தமிழக நில தரகர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் நில தரகர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சேலம் போஸ் மைதானம் அருகே தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சுமார் 450 பேர் நேற்று காலை முதல் மாலை வரையிலும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

மாவட்டம் முழுவதும்

சேலம் மாநகரம் மட்டுமின்றி இடைப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், தம்மம்பட்டி, வீரபாண்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், நங்கவள்ளி, கெங்கவல்லி உள்பட மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்களை சேர்ந்த கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.