Feb 6, 2015

ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் 'மக்கள் முதல்வர்' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் எழுதியுள்ள வேண்டுகோள் கடிதம்

கடந்த 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்து, இந்த வெற்றியின் மூலம் மூன்றாம் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழக மக்களுக்கு சேவை புரிந்திடுவதற்கான நல்வாய்ப்பினை நீங்கள் எனக்கு நல்கினீர்கள். இதற்காக முதலில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தற்போது மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த 2006 முதல் 2011 –ம் ஆண்டு வரை நடைபெற்ற மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், அனைத்துத் துறைகளும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அதுவன்றி, நில அபகரிப்பு, நாள்தோறும் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதுடன் மின்வெட்டால் தமிழகமே இருள் சூழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏழை எளியோருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைத்துத் துறைகளையும் தங்கள் குடும்ப சொத்தாக பாவித்து கபளிகரம் செய்து தமிழ்நாட்டையே சின்னாபின்னப்படுத்தியது தி.மு.க. அரசு. ஒரு அவல ஆட்சியை தந்த தி.மு.க.வை மக்கள் சக்தி என்னும் உங்கள் துணையோடு வீழ்த்தி, அண்ணா தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று உள்ளேன்.
தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறவும், தமிழ்நாடு நலம் பெறவும், பல்வேறு முன்னோடி திட்டங்களைத் தீட்டி தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியதை அங்கீகரிக்கும் வகையில் தான், கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் எனது தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தமிழக மக்கள் தேடித்தந்தார்கள். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும் அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு பெருவாரியான வாக்குகளை வழங்கி, வளர்ச்சிக்கு உறுதுணையாக நாங்களும் உள்ளோம் என்பதை நீங்கள் பறைசாற்றினீர்கள்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த இடைத்தேர்தல் சதிகாரர்களால் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தல். சதியும் விதியும் இணைந்து நடத்திய சதுராட்டத்தில், விளைந்திட்ட இடைத்தேர்தல், ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பெருமக்களாகிய உங்கள் அன்பும், பற்றும் என்னுடன் பின்னிப் பிணைந்துள்ள பாசத்தையும், இந்த இடைத் தேர்தலால் எள்ளளவும் குறைத்திட இயலாது. நமக்குள்ளே உள்ள பந்தம் இன்னும் மேன்மை அடையவே இது வழிவகுக்கும்.
கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானதல்ல. அந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தற்போது நடைமுறையில் உள்ள தீர்ப்பு இறைவனின் திருவிளையாடல் தான். நமக்கு சோதனை அளித்துள்ள இறைவன், நம் நெஞ்சுரத்தை வலுப்படுத்தி இதையே சாதனையாய் மாற்றி விடுவார் என்பதில், உங்களைப் போலவே எனக்கும் அதிக நம்பிக்கை உண்டு. இருப்பினும் இந்த இடைப்பட்ட காலத்தில் தேர்தல் சட்ட விதிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில், உங்களது பொன்னான வாக்குகளை, அண்ணா தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதிக்கு வழங்கும்படி உங்களை இந்த கடிதம் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.
2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை மூலம் தமிழக மக்களுக்கு நான் வழங்கி இருந்தேன். அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். ஸ்ரீரங்கம் தொகுதி மக்களாகிய உங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளேன். எஞ்சிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இன்னும் காலம் உள்ளது.
தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோடச் செய்யவேண்டும் என்ற கோட்பாட்டுடனும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிட வேண்டும் என்ற குறிக்கோளுடனும், பல்வேறு திட்டங்களை கடந்த மூன்றரை ஆண்டுகளில் அண்ணா தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், அனைத்து மக்களையும், குறிப்பாக விளிம்பில் உள்ள மக்களை அரவணைத்து, இந்த அரசு அவர்களுக்கான அரசு, ஏழை எளியோருக்கான அரசு, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசு’ என்பதற்கேற்ப, பல்வேறு நலத்திட்டங்களை அண்ணா தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
ஏழை எளியோருக்கு நிவாரணம் வழங்குவதோடு, அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசிட, அவர்கள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நின்று, அரசை மட்டும் சார்ந்திராமல், தங்களுக்குத் தேவையானவற்றை அவர்களே வாங்கிக் கொள்கிற சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களையும் உங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் மனிதவள மேம்பாட்டிற்கான கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கு என பல்வேறு புதுமை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; ரூ.50 ஆயிரம் வரை திருமண உதவித்தொகையும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், ஏழை கிராமப்புற மக்களுக்கு கறவை பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள் வழங்கும் திட்டம்; சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், அரசு கேபிள் டிவி மூலம் மாதம் ரூ.70 என்ற குறைந்த கட்டணத்தில் அதிக எண்ணிக்கையிலான தொலைக்காட்சி சேனல்களை கண்டுகளிக்க வழிவகை செய்யும் திட்டம்; மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்; விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்;கட்டணமில்லாக் கல்வி; கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, ஆண்டுதோறும் 4 விலையில்லா பள்ளிச்சீருடைகள், புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப்புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், கணித உபகரணப் பெட்டி, கிரையான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கும் திட்டம், பள்ளிக்குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையிலான கலவை சாதம் வழங்கிடும் சத்துணவுத் திட்டம், உயர் வகுப்புகளில் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தாய் சேய் நலம் காக்கும் வகையில் ரூ.12 ஆயிரம் வழங்கும் மகப்பேறு உதவித் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் திட்டம், இந்துக்கள் மானசரோவர் மற்றும் முக்திநாத் புனிதப் பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுவதுடன், வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் அரிசி விற்பனை, சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25–க்கும், ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30–க்கும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.30–க்கும் வழங்கப்படுகின்றன. குறைந்த விலையில் தரமான காய்கறி கிடைக்கும் வகையில் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டுவரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் வயிறாற உண்ணும் வகையில் ‘அம்மா உணவகங்கள்’ அனைத்து மாநகராட்சிகளிலும் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பர் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
அம்மா உணவகங்கள் மட்டுமின்றி, ‘அம்மா குடிநீர்’, ‘அம்மா உப்பு’, ‘அம்மா விதைகள்’ மற்றும் ‘அம்மா மருந்தகங்கள்’ என மக்கள் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையன்றி, 190 ரூபாய்க்கு ஒரு மூட்டை சிமெண்ட் வழங்கும் ‘அம்மா சிமெண்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு ஏற்படுத்தும் வகையிலான ‘அம்மா திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக நீதியை நிலைநாட்டிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாடகைக் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய விடுதிகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த விடுதிகளில் உணவுக் கட்டணம், பள்ளி விடுதிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 755 ரூபாய் எனவும், கல்லூரிகளுக்கு 875 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. சுயநிதி கல்வி நிறுவனங்களில் இலவச, கட்டண இருக்கைகளில் அனுமதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு நிர்ணயிக்கப்பட்ட கற்பிப்புக் கட்டணம் உள்ளிட்ட கட்டாயக் கல்வி கட்டணங்கள் அனைத்தும் அரசே வழங்குகிறது. தாட்கோ மூலம் சுயதொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
வேளாண் துறையில் சிறப்பு சலுகைகள் வழங்கியதன் காரணமாகவும், புதிய உத்திகளை கடைபிடித்ததன் காரணமாகவும், விவசாய உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. 2011–12–ம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் 101.52 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனையை தமிழகம் எய்தியது. இதற்காக மத்திய அரசின் விருதும் நமக்கு கிடைத்துள்ளது. 2012–13–ம் ஆண்டில் பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும், கர்நாடகா தண்ணீர் திறந்து விட மறுத்ததன் காரணமாகவும், உணவு தானிய உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. விவசாயத்தில் புதிய உத்திகளை கையாண்டதன் காரணமாகவும், டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதன் காரணமாகவும், விவசாய பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அரசே தனது செலவில் பயிர் காப்பீடு செய்தது. அதுவன்றி, இந்தியாவிலேயே முதன்முறையாக வறட்சிக்கு என நிவாரணம் வழங்கிய அரசு அண்ணா தி.மு.க. அரசு தான். 20 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகளுக்கு 1,328 கோடியே 49 லட்சம் ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டது. 2013–14–ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 110.65 லட்சம் மெட்ரிக் டன் என புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2013–14–ம் ஆண்டுக்கு பயறு வகைகளில் உற்பத்தி சாதனைக்காக கிருஷிகர்மான் என்ற மத்திய அரசின் விரும் கிடைக்கப் பெற்றுள்ளது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிகபட்ச உணவு தானிய உற்பத்தி 82.63 லட்சம் மெட்ரிக் டன் தான். ஆனால் கடந்த ஆண்டின் உணவு தானிய உற்பத்தி முந்தைய தி.மு.க. ஆட்சியின் அதிகபட்ச உற்பத்தியை விட 34 விழுக்காடு அதிகமாகும்.
காவிரி டெல்டா பகுதிகளில் எந்தவித பிரச்சினையும் இன்றி விவசாயம் செய்திட நமக்குரிய காவிரி தண்ணீரை கர்நாடகம் திறந்து விடுவது அவசியமாகும். உச்சநீதிமன்றத்தின் மூலம் போராடி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது உங்கள் அன்பு சகோதரி தான். இந்த இறுதி ஆணையை சரிவர நடைமுறைப்படுத்திட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று காவிரியில் நமக்கு உரிய உரிமைகளை கட்டிக் காக்க மேகதாதுவில் கர்நாடகம் அணைகள் கட்ட உத்தேசித்து உள்ளதற்கு தடையாணை வழங்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் துணையோடு தமிழகத்தின் நலன் காக்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்."