Sep 25, 2018

மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி

மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா 13-ம் நாளை முன்னிட்டு பிள்ளையாருக்கு  27-வகை அபிஷேகம்


மலைக்கோட்டை


திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி இன்;று மதியம் மாணிக்க விநாயகர் கோவிலில் உற்சவ விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு நடன கணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி
முழு முதற்கடவுள் என்று போற்றப்படும் விநாயகர் எல்லா வகையான துன்பங்களையும் போக்கும் ஆற்றல் படைத்தவர். விநாயகரை வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் கிரக தோஷங்கள் நீங்கும் செல்வ செழிப்பு உண்டாகும். நல்ல கல்வி கிடைக்கும்.  “ஓம் கம் கணபதியே நம” என்பது விநாயகர் நாமம். இந்த நாமத்தை அன்றாடம் 3 முறையோ அல்லது 111 முறையோ சொன்னால் வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கும் என்;பது நம்பிக்கை.  அழகிற்கு முருகன் அறிவுக்கு கணபதி (விநாயகர்) என்று அனைவராலும் சொல்லப்படுகிறது.
இந்த பிள்ளையாருக்கு ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி (விநாயகர் பிறந்த நாள்) அமாவாசை முடிந்த 4-வது நாள்  கொண்டாடப்படுகிறது.
ராட்சத கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை  முன்னிட்டு மலைக்கோட்டை உச்சி விநாயகர் மாணிக்க விநாயகருக்கு  150 கிலோ எடை கொண்ட மிக பிரமாண்ட ராட்சத கொழுக்கட்டை  தயாரிக்கப்பட்டு  உச்சிப்பிள்ளையாருக்கும் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோவாக பிரித்து தொட்டில் கட்டி தூக்கி சென்று படையல் போட்டு பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சி விநாயகர்  மாணிக்க விநாயகர் கோவிலில் கடந்த 13-ம்தேதி தொடங்கி விநாயகருக்கு ஒவ்வொரு நாளும் உபயதாரர்களை கொண்டு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கு பால கணபதி நாகாபரண கணபதி  லஷ்மி கணபதி
தர்பார் கணபதி பஞ்சமுக கணபதி மூசிக கணபதி இராஜ கணபதி மயூர கணபதிகுமார கணபதி வல்லப கணபதி ரிஷபாருட கணபதி சித்தி புத்தி கணபதி  என 12 நாட்கள் மாலை 6 மணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு  அபிஷேகம் நடைபெற்றது.
27 வகை அபிஷேகம்
 இதில் 13-ம் நாளான இன்று பகல் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோயில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கும் மாணிக்க விநாயகர் மூலவருக்கும்  திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி சந்தனாதி தைலம் திரவிய பொடி அரிசி மாவு நெல்லி முல்லி பொடி மஞ்சள் பொடி குங்குமம் தேன் நெய் பஞ்சாமிர்தம் பால் தயிர் எலுமிச்சம்பழம் சாத்துக்குடி கரும்புசாறு திராட்சை விளாம்பழம்  மாதுளை அன்னாசிப்பழம் முப்பழம் பழவகைகள் அன்னாபிஷேகம் வெந்நீர் இளநீர் சந்தனம் சொர்ணாபிஷேகம் பன்னீர்  உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும் அதை தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும்  நடைபெற்றது.
14-ம் நாளான நாளை (புதன் கிழமை) காலை 11 மணிக்கு மூலவர் உற்சவருக்கு திருக்கோயில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
 ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்