Nov 21, 2014

மதுரை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை :ஸ்டாலின் புகாருக்கு மேயர் ராஜன் செல்லப்பா பதிலடி



   மதுரையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் முக ஸ்டாலின் ,தானும்,குழந்தைவேலுவும் மேயராக இருந்தபோது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசி இருக்கிறோம். அப்போது தி.மு.க.வின் எண்ணங்கள், கலைஞரின் கொள்கைகள் பற்றி பேசவாய்ப்பு கிடைத்தது.
சென்னை மேயராக இருந்தபோது, தான் செய்த சாதனைகள், திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட பணிகள் பற்றியெல்லாம்  எடுத்து கூறினார்கள். குழந்தைவேலு மேயராக இருந்தபோது, மதுரையில் சுற்றுவட்டச்சாலை, மேம்பாலங்கள், பாதாள சாக்கடை இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அவர் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.இப்போது நடைபெறும் ஆட்சியில், இதுபோன்ற பொதுப்பணிகள் நடைபெற்று இருக்கிறதா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். என கேள்வி எழுப்பினார் .இதற்கு பதில் அளிக்கிற வகையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மேயர் ராஜன் செல்லப்பா ,திமுக கடந்த 15 ஆண்டு காலம் மாநகராட்சியில் பதவி வகித்தும் ஒரு நன்மை கூட மதுரை மக்களுக்கு செய்யவில்லை ,இப்போது அதிமுக அரசின் மீது தவறான புகார் கூறுகின்ற முக ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போதும் அவரது அண்ணன் மத்திய அமைச்சராக இருந்த போது மதுரைக்கு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார்.அப்போது நிறைவேற்றப்படமடாமல் அரை குறையாய் விடப்பட்ட மேம்பால திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக ஆட்சி தான்.அவர்கள் 600 கோடியில் திட்டங்களை நிறைவேற்றியதாக சொல்வதெல்லாம் உண்மைக்கு மாறானது .அந்த திட்டத்திற்கு மாநகராட்சி நிதியை பயன்படுத்தாத காரணத்தால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 250 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி தந்ததாக குறிப்பிட்டார் .மேலும் மழையால் சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கபப்டும் .விதிமுறை மீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது .கிருதுமால் நதி வாய்க்கால் தோண்டுகிற பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார் .பேட்டியின் போது துணை மேயர் திரவியம் ,எம் எல் ஏ க்கள் சுந்தர்ராஜன் ,முத்துராமலிங்கம் ,மண்டல தலைவர் சாலைமுத்து,சுகந்தி அசோக் ,வழக்கறிஞர் ரமேஷ் ,நிலையூர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர் 

இந்தியாவிலேயே கூட்டுறவுத்துறைக்கு தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது: செல்லூர் ராஜூ பேச்சு




மதுரை மாவட்ட 61வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தமுக்கம் கலையரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரைப்பாண்டியன் வரவேற்றுப்பேசினார். மேயர் ராஜன்செல்லப்பா, கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், தமிழரசன், சாமி, கருப்பையா, கதிரவன், சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,019 பயனாளிகளுக்கு ரூ.4.82 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–
இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகிறது. இந்த சங்கத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம். அவர்களுக்கும் அந்த சங்கத்தில் பங்கு தொகை உண்டு. நிர்வாகிகளாகவும் வரலாம்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 392 சங்கங்கள் நஷ்டத்தில் இருந்தன. அம்மாவின் ஆலோசனையின் பேரில் வேண்டிய உதவிகளை செய்து, அவை இப்போது ஒரு கோடிக்கு மேல் வருமானம் தரும் சங்கங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவுத்துறை மூலம் 56 ஆயிரத்து 43 விவசாயிகளுக்கு பயிர் கடனாக சுமார் ரூ.305.52 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வறட்சி நிவாரணமாக 64 ஆயிரத்து 216 விவசாயிகளுக்கு, அரசு ரூ.23.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயிர் கடன் வட்டி இல்லாமல் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் கூட 7 சதவீத வட்டியுடன் கூடுதல் கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் கூட்டுறவு துறைக்கு வழி காட்டியாக திகழ்ந்து வருகிறது.
இதுதவிர கூட்டுறவு வங்கி மூலம் பால்மாடு வாங்க, ஆடு வளர்ப்பு, விவசாய உபகரணங்கள், கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், வீடு கட்ட மற்றும் வீட்டு அடமான கடன்களை வழங்குகிறது. மேலும் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையொல்லாம் விட 37 ஆண்டுகளாக வரலாற்று சாதனையாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக இன்று உயர்ந்துள்ளது. இதன் மூலம் 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் வாழ்வில் ஒளியேற்றிய மக்கள் முதல்வர் அம்மாவை தினமும் வணங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள், பரிசுகளை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.
கூட்டுறவு வங்கி மண்டல இணைப்பதிவாளர் பழனிவேலு, கூட்டுறவு இணைப்பதிவாளர் தனலட்சுமி, ஆவின் தலைவர் தங்கம், பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராஜா, மண்டல தலைவர் சாலைமுத்து, ஜெயவேல், ராஜபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஜெயபால், மாரிச்சாமி, பிரிட்டோ, புதூர் அபுதாகீர், முருகன், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புசெழியன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் முருகேசன் நன்றி கூறினார்இந்தியாவிலேயே கூட்டுறவுத்துறைக்கு தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது: செல்லூர் ராஜூ பேச்சு