Sep 30, 2014

அவசரகால ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது

ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம், மேல்முறையீடு
மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என விடுமுறை கால நீதிபதிக்கு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பட்டேல் உத்தரவிட்டுள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபாராதம் அளித்தும் உத்தரவிட்டது.
 
இதையடுத்து, நேற்று(29.09.14) ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், தனக்கு அரசு அறிவிப்பாணை கிடைக்கவில்லை என்றும், வழக்கை விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் கூறியதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
 
இந்நிலையில், ஜாமின் மனுவை அவசர கால மனுவாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இதையடுத்து, விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா இந்த மனுவை நாளை விசாரிப்பார் என்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பட்டேல் உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெயலலிதா ஜாமின் மனு மீதான விசாரணை நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.