Feb 25, 2015

ஜெயலலிதா பிறந்தநாள்: அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சர்வ சமய பிரார்த்தனை- அன்னதானம்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சர்வ சமய பிரார்த்தனை மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாள் மதுரையில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஜெயலலிதா நீடூழி வாழவேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் அங்குள்ள நந்தவனத்தில் மா, வில்வ மரக்கன்றுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ நட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் போர்வை போர்த்தி வழிபாடு நடத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. தெற்கு 2–ம் பகுதி சார்பில் 100 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
பின்னர் கீழவாசல் தூய மரியன்னை தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மதுரை அண்ணாநகரில் பகுதி செயலாளர் முருகன் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பேருக்கு மதிய அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. மதுரையில் உள்ள 76 வார்டுகளிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் இனிப்பு வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இன்று மாலை 6 மணிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இன்று அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தங்கமோதிரம் வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி வருகிற 26–ந் தேதி நடக்கிறது.
அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்கிறார். மேலும் அனைத்து பகுதி, தொகுதி, வட்டங்களிலும் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன