Feb 25, 2015

ஜெயலலிதா பிறந்தநாள்: மதுரை மாநகராட்சியில் 67 அடி நீள கேக் வெட்டி கொண்டாட்ட

ஜெயலலிதா பிறந்தநாள்: மதுரை மாநகராட்சியில் 67 அடி நீள கேக் வெட்டி கொண்டாட்டம்
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மதுரை மாநகராட்சியில் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ 67 அடி நீள கேக்கை வெட்டினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியில் சிறப்பு கவுன்சில் குழு கூட்டமும் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கூட்ட மன்ற அரங்கின்வெளியே 67 அடி நீளமுள்ள பிரமாண்ட கேக் வைக்கப்பட்டது. அதனை மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெட்டினார்.
அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் அம்மா வாழ்க என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் செல்லூர் ராஜூ, கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தர்ராஜ், முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை மேயர் திரவியம் உறுதிமொழி வாசித்ததும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பாராட்டி மேயர் ராஜன்செல்லப்பா தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கவுன்சிலர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். கமிஷனர் கதிரவன், மண்டலத் தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், சண்முகவள்ளி, நிலைக்குழு தலைவர்கள் முத்துக்கருப்பன், சுகந்தி அசோக், முனியாண்டி, கவுன்சிலர்கள் முருகேசன், ராஜீவ்காந்தி, கேசவ பாண்டியம்மாள், அனுராதா, கார்னர் பாஸ்கரன் உள்பட அனைவரும் பங்கேற்றனர்.
மதுரை மாநகராட்சி எல்கையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டணமில்லா பிறப்பு சான்றிதழ் வழங்குவது, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா இளைஞர் மேம்பாட்டு மையம் தொடங்கி அதன் மூலம் உயர்கல்வி மேம்பாட்டு பிரிவு, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு, கலை மேம்பாட்டு பிரிவு போன்றவற்றை அரசு மானியத்துடன் ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.