Oct 11, 2014

தமிழக மக்களுக்கு எண்ணிலடங்கா நலத்திட்டங்களை வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி நல்லாட்சி புரிந்து வந்துள்ள ஜெயலலிதா தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சட்டரீதியாக சந்தித்து விரைவில் வெற்றி காண்பார் என்பது உறுதி...சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.


ஒரு கட்சித் தலைவரோ, உயர்ந்த பதவி வகிப்பவரோ ஒரு வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்டு தண்டனை பெறும்போது அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அபிமானிகளும் உணர்ச்சிவசப்படுதல் என்பது இயல்பு. இந்தியா முழுவதும் இத்தகைய உணர்ச்சி வெளிப்பாடுகள் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தலைவர்கள் கைதானபோதும், தண்டனைக்கு உள்ளானபோதும் நிகழ்ந்துள்ளன. முன்பு ஒரு முறை தி.மு.க. தலைவரும், பொதுச் செயலாளரும் கைது செய்யப்பட்டபோது திருச்சியில் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. முத்தரசநல்லூரில் குண்டு வெடித்து ஒருவர் பலியான சம்பவங்களும் உண்டு.
தமிழகத்தில் அமைதி நிலவுகிறபோது சட்டம் ஒழுங்கு முற்றிலும் சிதைந்துவிட்டது. அமைதி இழந்துவிட்டது என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் புலம்பி குற்றம்சாட்டுவது வியப்பாக உள்ளது. ஏனென்றால் இப்படிக் குற்றம் கூறுபவர்கள் முன்பு கைது செய்யப்பட்டபோது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை மக்கள் மறந்துவிடவில்லை.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவை தேர்தல் களத்தில் சந்தித்து படுதோல்வி அடைந்தவர்கள், மக்கள் அவர்களுக்கு எதிராக அளித்த தீர்ப்பை மறந்துவிட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் மூலம் பல லட்சம் கோடிகள் ஊழல் செய்து தி.மு.க. மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராஜா, தன் மகள் கனிமொழி எம்.பி. ஆகிய இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததையும், இன்னும் 2ஜி வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதையும் மறந்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. தலைவர், தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும், முக்கிய பதவி வகித்தவர்களும் தியாகிகளைப்போல தூய வாழ்க்கை வாழ்ந்தது போன்று தி.மு.க. தலைவர், கருத்து வெளியிட்டிருப்பது மிக மிக வேடிக்கையாக உள்ளது. அதைவிடப் பெரிய வேடிக்கை ‘‘ஊழலின் நிழல் கூட தி.மு.க. மீது படுவதை கலைஞர் விரும்ப மாட்டார்’’ என்ற டாக்டர் ராமதாசின் சமீபத்திய அறிக்கைதான்.
தமிழகத்திற்கு வன்முறை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது யார் என்பதை இந்த நாடே அறியும். சட்டம் ஒழுங்கு காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிற நிலையில் சட்டம் ஒழுங்கை மேற்கோள் காட்டி மாநில சுயாட்சி பற்றி முழங்கியவர்கள், இன்று மாநில நிர்வாகத்தைக் கவனிக்க மத்திய அரசை அழைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் மக்கள் மன்றம் தகுந்த பதிலளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கும் காவிரி பிரச்சினைக்கும், முல்லைப் பெரியார் பிரச்சினைக்கும், மத்திய அரசை அழைக்காதவர்கள், அண்ணா தி.மு.க. அரசைக் கவிழ்க்க மத்திய அரசை அழைக்கிறார்கள். முதலில் 355 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர். அடுத்து 356 தானாக வராதா என்ற ஆசையில் பலர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று அறிக்கை மேல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் கோடானுகோடி தமிழ மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கிறாரே அதை உங்களால் அகற்ற முடியுமா?
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நல்லதொரு தீர்ப்பு கிடைக்கப் பெற்று சோதனைகளை வென்று புது எழுச்சியோடு திரும்ப வருவார். அதுவரைக்கும் அனைவரும் அமைதி காப்போம். மக்களைத் தூண்டிவிடுகிற எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல் அவற்றை முறியடிப்போம்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.