Nov 26, 2014

திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் டேம்.சண்முகம் தலைமையில், துணைத்தலைவர் ஆனந்தகுமார் முன்னிலையில் நடைபெற்றது

கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் வீரமலை,  ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கமித்திரை, வட்டார வளர்ச்சி  அலுவலர் (நிர்வாகம்) மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் தண்ணீர்பந்தல் நடராஜன், வாசுதேவன் உள்ளிட்டவர்களும், அரசு அலுவலர்களும்  கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுபினர்கள் பேசுகையில், 
   நஞ்சிகாளிபாளையம் பகுதியில் தார்ரோடு அமைக்கக்கோரி கலெக்டர் கலந்து கொண்ட மனுநீதி முகாமில் விண்ணப்பம் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தாராபுரம் தளவாய்பட்டினம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. குறிப்பாக குப்பை மற்றும் தெருவிளக்கு பிரச்னை அதிக அளவில் உள்ளது. குண்டடம் பகுதிக்கு காவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்குபகுதி 11வது வார்டு முழுவதும் குடிநீர் பிரச்னை பெரிய அளவில் உள்ளது. ஆககே குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.        நந்தவனம் ஊராட்சி அத்திகாடு பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிப்பட்டி பகுதியில் மின் கம்பங்கள் மோசமான நிலையில் உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை தாலுகா உழவர் சந்தை அருகே உள்ள வணிக வளாகத்தில் ஏற்கனவே உள்ளவர்களுக்கே கடைகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் கடைகள் ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வணிக வளாகத்தின் மேல் பகுதி முழுவதும் கடைகள் காலியாக உள்ளது. அதை மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு ஒதுக்க வேண்டும். 
தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட நந்தவனம்பாளையம் ஊராட்சியில் ரேசன் கடைகளில், தமிழக முதல்வரின் சிறப்பு  திட்டங்களில் ஒன்றான விலையில்லா அரிசி திட்டத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், விலையில்லாமல் வழங்க வேண்டிய 20 கிலோ அரிசிக்கு பதிலாக 15 கிலோ மட்டும் வழங்கி வந்தார்கள். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டரின் நடவடிக்கையின் பேரில் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தும்பரப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு ரேசன் கடையில் இன்னும் 15 கிலோ அரிசி மட்டுமே வழங்கி வருகிறார்கள். அரசின் பெயரை கெடுக்கும் வகையில் செயல்படும் ரேசன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேற்கண்டவாறு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பேசினர். அவர்களின் புகாருக்கு பதிலளித்து தலைவர் எம்.சண்முகம் பேசியதாவது:-
உறுபினர்களின்  கோரிக்கைகள் அனைத்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலங்களில் சேதமடைந்த குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைக்க நெடுச்சாலைத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ள ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான  ஏற்பாடுகள் செய்யப்படும்.துங்காவி ஊராட்சியில் உள்ள ஆதி திராவிட மக்களுக்கு தாமதம் இல்லாமல் இலவச வீட்டுமனை பட்டா  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
குறிப்பாக அரசின் திட்டத்தை செயல்படும் வகையில் செயல்படும் ரேசன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி நிதி நிலையை பொருத்து, 17 வார்டுகளிலும் ரூ.4 லட்சம் மதிப்பில் பொது கழிப்பிடம் கட்ட அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் இடத்தை தேர்வு செய்து வழங்கவேண்டும்.குறிப்பாக கழிப்பிடங்கள் பள்ளி மாணவர்கள் பயன்படக்கூடிய வகையில், பள்ளி அருகில் இருக்கும்படி இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக சாக்கடை கால்வாய் கட்டும் இடத்தையும் தேர்வு செய்து ஒப்படைக்க வேண்டும். 
இவ்வாறு மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் பேசினார்.